அரசாங்கம் மக்களுக்கானதாக இருந்தால், மக்கள் நலன்களை முதன்மையாக கொண்டு தானே அரசாங்க அமைப்புகள் இயங்க வேண்டும்? ஆனால், அரசாங்க அமைப்புகள் அனைத்தும் அதிகாரிகளின் கட்டளைகளுக்காகவும், அதிகாரிகள் அனைவரும் அரசியல்வாதிகளின் கட்டளைகளுக்காகவும், அரசியல்வாதிகள் அனைவரும் தங்களுடைய வருமானத்திற்காகவும் தனியார் பெருநிறுவனங்களின் தேவைகளுக்காவும் செயலாற்றிக் கொண்டிருக்கும் போது, எந்த அரசாங்கமும் நமக்காக செயல்படுவதில்லை என்று தானே அர்த்தம்?
அரசாங்கம் மக்களுக்கானதாக இருந்தால், அரசாங்கத்தின் திட்டங்கள் அனைத்தும் தனது மண்ணையும் மக்களையும் காக்கக்கூடியதாக இருக்க வேண்டும் தானே? ஆனால், வளர்ச்சியின் பெயரில் நமது இயற்கை வளங்கள் அனைத்தையும் தனியார் நிறுவனங்களிடம் தாரை வார்த்துக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளும் அரசாங்கமும் எப்படி நமக்கானதாக இருக்க முடியும்?
பன்னாட்டு நிறுவனங்களின் லாபங்களுக்காகவும், அவர்களால் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கிடைக்கக்கூடிய வருமானத்திற்காகவும், நமது சுற்றுச்சூழலை சீரழிக்கக்கூடிய, நமது உழைப்பை சுரண்டக்கூடிய திட்டங்களை நம்முடைய எதிர்ப்புகளையும் தாண்டி நம்மிடம் திணித்துக் கொண்டிருக்கும் அரசாங்கங்கள் எப்படி நமக்கானதாக இருக்க முடியும்?
தனியார் நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்று நாம் நினைக்கலாம்; புள்ளி விவரங்களை காட்டி வளர்ச்சியை நிரூபிக்க முயற்சி செய்யலாம்; ஆனால், வெகு சில பெரு முதலாளிகள் தானே, நாட்டின் பெரும்பான்மையான தொழில்களையும், அதிக லாபம் ஈட்டும் வணிக நிறுவனங்களையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்?
உணவு, மருத்துவம், கல்வி, போக்குவரத்து, செய்தி மற்றும் காட்சி ஊடகங்கள், வங்கிகள், தொலைதொடர்பு, தகவல் தொழில்நுட்பம், கனிம வளங்கள், கட்டுமானங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், மின் உற்பத்தி, உற்பத்தி துறை போன்ற அத்தனை அத்தியாவசிய துறைகளின் பெரும் லாபங்களும் வெகு சொற்பமான பன்னாட்டு நிறுவனங்களும், தனியார் பெரு நிறுவனங்களும், அரசியல்வாதிகளும், மிக சொற்பமான மேல்தட்டு பணக்காரர்களிடம் தானே இருக்கிறது?
நாடு வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்று நம்மை நம்ப வைப்பதற்காக எடுக்கப்படும் அரசாங்க விளம்பரங்களும், ஊடக செய்திகளும் நாட்டின் உண்மை நிலவரத்தையும், மக்களின் யதார்த்த வாழ்க்கையையும் படம்பிடித்து காட்டுகிறதா? வளர்ச்சிக்கான அரசாங்க சதவிகித கணக்குகள், மக்களின் சமூக – பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கியதாக இருக்கிறதா?
அப்படி என்றால், உண்மையில் நம்முடைய நாடு வளர்ச்சி அடைந்திருக்கிறதா? இல்லை, வெகு சில தனியார் நிறுவனங்களின் வளர்ச்சியால் நம்முடைய நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது என்று நாம் நம்ப வைக்கப்படுகிறோமா?

ஒரு நாடு உண்மையில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்றால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும், நாட்டு மக்களின் வரிச்சுமையும் குறைந்து கொண்டிருக்க வேண்டும் தானே? ஆனால், அனைத்து பொருட்களின் விலைவாசியும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கும் போது, நம்முடைய அத்தனை வரிகளும் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருக்கும் போது, நாடு வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்பது எப்படி உண்மையாக இருக்க முடியும்?
அனைத்து மக்களுக்குமான அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்திய பிறகு தானே வளர்ச்சி திட்டங்களை நோக்கி ஒரு நாடு நகர வேண்டும்? அப்படியெனில், எந்த அரசாங்கமாவது மக்களுடைய அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறதா?
எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், நம்முடைய உணவை நஞ்சாக்கி, மண் வளத்தை சிதைத்து, விவசாயிகள் கடனாளிகளாக மாற்றி, நமது வேளாண் மரபுகளை அழித்து கொண்டிருக்கும் நவீன விவசாய முறையை தானே ஆதரித்துக் கொண்டிருக்கிறது?
எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், காலம் காலமாக நம்மிடம் இருந்த மருத்துவ அறிவையும், பல்வேறு மருத்துவ முறைகளையும் புறக்கணித்து, நோய்களை வைத்து வியாபாரம் செய்கிற, நம்மை நிரந்தர நோயாளிகளாக மாற்றிக்கொண்டிருக்கும் ஆங்கில மருத்துவத்தை தானே திணித்து கொண்டிருக்கிறது?
அரசாங்கங்கள் மக்களுக்கானதா இருந்திருந்தால், கல்வி நிலையங்களை பயன்படுத்தி சுயமாக சுதந்திரமாக சிந்திக்கக்கூடிய, ஒழுக்கமான, சமூக பொறுப்புள்ள எதிர்கால சந்ததியினரை தானே உருவாக்கி இருக்க வேண்டும்? பள்ளிக்கூடங்களையும் கல்லூரிகளையும் பயன்படுத்தி எவ்வளவு பெரிய சமூக மாற்றங்களை எல்லாம் செய்திருக்க முடியும்?
அரசாங்கங்கள் மக்களுக்கானதா இருந்திருந்தால், ஊடகங்களை பயன்படுத்தி சமூக அக்கறையுள்ள, அரசியல் ஆர்வமுள்ள, அரசியல் தெளிவுள்ள, அரசியலில் ஈடுபடுகிற மக்களை தானே உருவாக்கி இருக்க வேண்டும்? தொலைக்காட்சிகளின் மூலமாகவும் திரைப்படங்களின் மூலமாகவும் எப்படிப்பட்ட கருத்துக்களை எல்லாம் மக்களின் மனங்களில் விதைத்திருக்க முடியும்? எவ்வளவு மேம்பட்ட மனிதர்களையும், எப்படியான பண்பட்ட சமூகத்தையும் படைத்திருக்க முடியும்?
ஆக, எந்த பிரச்சனைகளுக்குமான நிரந்தர தீர்வுகளையும் சிந்திக்காமல், உண்மையான தீர்வுகளே தெரிந்தாலும் தீர்வுகளை நோக்கி நகராமல், அந்தப் பிரச்சினைகளை தங்களின் சுய லாபங்களுக்காக பயன்படுத்தி, அரசியல் செய்து கொண்டிருக்கும் அரசாங்கங்கள் எப்படி நமக்கானதாக இருக்க முடியும்?
இன்றைய அரசாங்கங்கள் மக்களுக்கானதா இருந்திருந்தால், அரசாங்கத்தின் தேவையோ உதவிகளையோ நாடாமல், மக்கள் அனைவரும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான சூழலை தானே உருவாக்க வேண்டும்? ஆனால், மக்கள் அனைவரையும் அரசாங்கத்தின் உதவிகளை நம்பி வாழவைத்து கொண்டிருக்கிற அரசாங்கங்கள் எப்படி மக்களுக்கானதாக இருக்க முடியும்?
அப்படி என்றால், எந்த அரசாங்கமும் நம்முடைய நலன்களுக்காக இதுவரை செயல்படவில்லை, இனியும் செயல்படாது என்று தானே அர்த்தம்? அரசாங்கம் என்பதே மக்களுக்காக ஒருபோதும் செயல்பட்டதில்லை, இனியும் எப்போதும் செயல்படாது என்பது தானே உண்மை?
தொடர்ந்து இது போன்ற கேள்விகளை எழுப்புவதற்கும், மாற்றத்தை நோக்கி பயணிப்பதற்கான உரையாடல்களில் பங்கெடுப்பதற்கும் வட்டத்தில் இணைந்திருங்கள்.
வட்டம், உலகத்தை மாற்றக்கூடிய கேள்விகளை எழுப்புகிறது. புதியதொரு உலகத்தை உருவாக்கக் கூடிய உரையாடல்களை வட்டம் தொடங்குகிறது. விழிப்படையவும், ஒன்றிணையவும், வட்டம்.








இந்த புவி கோளத்தையும் மாற்று சிந்தனை கொண்ட மக்களின் மீது பேரன்பு கொண்ட நல் உள்ளங்களின் அறிவை திசை திருப்பும் வகையில் நோட்டோ என்ற ஒரு பொத்தானை ஏற்படுத்தி நம்மை மடைமாற்றம் செய்யக்கூடிய அதிகார அரசாங்கம் இருக்கத்தான் செய்கிறது..
நோட்டாவுக்கு வாக்களித்தால் நன்மை நடந்து விடும் என்று நம்ப வைக்கப்படுகிறது
அரசாங்கம் என்ற பெயரில் பசுத்தோல் போர்த்திய புலியாகத்தான் ஒவ்வொரு அரசும் இருக்கிறது
தனிப்பட்ட முறையில் போராட வலு சேர்க்கும் வகையில் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று ஆர்வம் உள்ளது ஆனால் அவற்றை எப்படி செயல்படுத்துவது என்று சரியான வழியை வட்டம் தீர்மானிக்கும் அல்லது வட்டத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு நல் உள்ளங்களும் வழிகாட்டுதலாக இருத்தல் நன்மை பயக்கும் என்று வலிமையுடன் நம்புகிறேன்..
தேர்தல் என்பதே தேர்ந்தெடுக்கும் அதிகாரம் நம்மிடம் தான் இருக்கிறது என்று நம்மை நம்ப வைப்பதற்கான ஒரு நாடகம் தான்.. தேர்தல் என்பதே ஓர் கண்துடைப்பு தான்.. இரண்டு விரல்களில் ஒன்றை தொடுவதற்கான உரிமை தான் நம்மிடம் இருக்கிறது.. ஆனால், அந்த இரண்டு விரல்களுமே ஒரே கைகளின் விரல்கள் தான்.. பிரித்துப் பார்க்கக்கூடிய அளவில் எந்த ஒரு வித்தியாசமும் இருக்காது.. தேர்தலின் மூலமாக இங்கு எவ்வித மாற்றமும் எப்போதும் வரப்போவது கிடையாது.. ஒருவேளை, தேர்தலின் வழியாக ஒரு நல்ல மாற்றம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்றால், இங்கு தேர்தல்களே நடக்காது.. அரசாங்கமே நமக்கானது இல்லை என்ற சூழ்நிலையில், அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் தேர்தல் எப்படி நமக்கானதாக இருக்க முடியும்?