அரசாங்கம் மக்களுக்காகச் செயல்படுகிறது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். அரசாங்கத்தின் அமைப்புகள் அனைத்தும் மக்களாகிய நமது நலன்களுக்காக தான் செயல்படுகிறது என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் என்ன?
நமது நலன்களுக்காக நாம் அனைவரும் இணைந்து நம்முள் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது தான் அரசாங்கம் என நினைக்கிறோம்.
நினைப்பது சரி தான், நாம் தான் தேர்ந்தெடுக்கிறோம். ஆனால், நமக்காக உழைப்பவர்களைத் தேர்ந்தெடுக்கிறோமா? இல்லை, பெரு நிறுவனங்களுக்காகவும், வெளிநாட்டு அமைப்புகளுக்காகவும், வணிகர் சங்கங்களுக்காகவும், அவர்களுக்காகவும், அவர்களுடைய உறவினர்களுக்காகவும் பாடுபடுபவர்களைத் தேர்ந்தெடுக்கிறோமா? நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நமது நலன்களுக்காக இயங்கும் மனிதர்களைத் தேர்ந்தெடுக்கிறோமா? இல்லை, மக்கள் நலனில் உண்மையான அக்கறை இல்லாத, இரு கட்சிகளுள் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வைக்கப்படுகிறோமா?
அரசின் சட்டங்கள் மக்கள் அனைவருக்கும் சமமான உரிமைகளையும் அதிகாரத்தையும் வழங்குகிறது என நம்புகிறோம். மக்கள் அனைவருக்கும் ஒரு வாக்கு தான் என்பதனால் மக்கள் அனைவரும் சமம் தான் என்கிறது மக்களாட்சி. ஆனால், அதிகாரம் நம் அனைவரையும் சமமாக நடத்துகிறதா? அரசாங்க அமைப்பும், சட்டமும் வசதியானவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் தரக்கூடிய உரிமைகளையும் சலுகைகளையும் எளிய மனிதர்களுக்குத் தருகிறதா?
அரசு அலுவலகங்களும் அரசு ஊழியர்களும் நமக்காக, நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தான் பணியாற்றுகிறார்கள் என நம்புகிறோம்.
ஆனால், அரசு அலுவலகங்கள் மக்களின் குரல்களை, குறைகளை அரசிடம் கொண்டு சென்று தீர்வு காண்பதற்காகச் செயல்படுகிறதா? இல்லை, அரசாங்க திட்டங்களையும் முடிவுகளையும் மக்களிடம் திணிப்பதற்காகச் செயல்படுகிறதா? அதிகாரிகளும் பணியாளர்களும் மக்கள் பிரதிநிதியாக இயங்குகிறார்களா? இல்லை, அதிகாரத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்து செயல்படுகிறார்களா?
அரசியல் தலைவர்கள் நம்முடைய வாழ்க்கையை உயர்த்துவதற்காகத் தான் திட்டங்கள் நிறைவேற்றுகிறார்கள் என நம்புகிறோம்.
நினைப்பது சரி தான், அரசியல் தலைவர்கள் நிறைய நலத் திட்டங்கள் நிறைவேற்றுகிறார்கள் தான். ஆனால், அந்த திட்டங்கள் அனைத்தையும் நம்முடைய நலன்களுக்காக நிறைவேற்றுகிறார்களா? இல்லை, திட்டத்தால் பெரும் பணம் படைக்கப்போகும் நிறுவனங்களின் நலன்களுக்காகவும், அதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய வருமானத்திற்காகவும் நிறைவேற்றுகிறார்களா?

அரசின் காவல்துறை மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக இயங்குகிறது, நீதித்துறை மக்களுக்கான உரிமைகளையும் நீதியையும் உறுதி செய்வதற்காகச் செயல்படுகிறது என நம்புகிறோம்.
நினைப்பது சரி தான், காவல்துறையும் நீதித்துறையும் மக்களின் பாதுகாப்பிற்கும் நீதியை நிலை நாட்டுவதற்கும் தான் செயல்படுகிறது. மக்களுக்குள் ஏற்படும் சண்டைகளை தீர்ப்பதற்கும், மக்கள் செய்யும் குற்றங்களை தண்டிப்பதற்கும் தான் செயல்படுகிறது. ஆனால், மக்கள் அரசாங்கத்தைக் கேள்விகள் கேட்டாலோ, அநீதிகளுக்கு எதிராகப் போராடினாலோ, காவல்துறையும் நீதித்துறையும் மக்களின் பக்கம் நிற்குமா? அதிகாரத்தின் பக்கம் நிற்குமா?
கேட்கப்பட்ட கேள்விகளை எவரும் தனிப்பட்ட முறையில் தன்னை கேள்வி எழுப்புவதாக நினைக்க வேண்டாம். எந்த ஒரு தனி நாட்டையோ, எவ்வித அரசாங்க அமைப்பையோ, எந்த பகுதியின் தனிப்பட்ட கட்சிகளையோ, எந்த அரசியல் தலைவர்களையோ, அதிகாரிகளையோ, பணியாளர்களையோ நோக்கி கேட்கப்பட்ட கேள்வியாக நினைக்க வேண்டாம்.
எந்த நாடாக இருப்பினும், எவ்வித அரசியல் அமைப்பாயினும், எந்த கட்சி ஆட்சி புரிந்தாலும், எவர் அதிகாரத்தில் இருந்தாலும், எந்த துறைகளில் எவர் பணிபுரிந்தாலும் அரசு இயந்திரத்தின் செயல்பாடுகள் மக்களுக்கானதாக இருக்கிறதா என திறந்த மனதுடன் சிந்தித்துப் பார்ப்போம்.
நமக்குத் தெரிந்த நிகழ்வுகளையும், நமது நினைவுகளில் இருக்கும் அரசியல் சம்பவங்களையும், நமது தனிப்பட்ட அனுபவங்களையும் மனதில் கொண்டு, மேல் எழுப்பிய கேள்விகள் அனைத்தையும் நாம் அனைவரும் நமக்குள் சிந்தித்துப் பார்ப்போம்.
அரசு இயந்திரத்தில் நியாயமான மனிதர்களாக, நல்லவர்களாக யாருமே இல்லையா எனச் சிந்திக்க வேண்டாம். நேர்மையான தலைவர்களும், அதிகாரிகளும், காவலர்களும், நீதிபதிகளும் இருக்கிறார்கள். எண்ணிக்கையில் மிகக் குறைவாக, அங்கொன்றும் இங்கொன்றுமாக தானே இருக்கிறார்கள்?
தனி மனிதர்கள் சிலர் அனைத்து துறைகளிலும் அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் வகைகளிலும், அவர்கள் பனி புரியும் துறைகளுக்கே பெருமை சேர்க்கும் வகைகளிலும் செயலாற்றுகிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையாக இயங்குவதற்கு எத்தனை இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது?
தன்னுடைய பதவிக்கும், மக்களுக்கும் உண்மையாக வேலை பார்ப்பதற்குச் சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கும் போது, அரசாங்கமும் அரசாங்கத்தின் கட்டமைப்பும் மக்களுக்கு எதிராக இருக்கிறது என்று தானே அர்த்தம்?
நாம் அனைவரும் அரசியல் தெளிவில்லாமல் தானே நமது ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்? அரசு அலுவலகங்கள் அனைத்தும் அதிகாரத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்து தானே செயல்படுகிறது? அரசியல்வாதிகள் பெருநிறுவனங்களின் விருப்பங்களுக்காகவும், தங்களுடைய வருமானத்திற்காகவும் தானே செயல்படுகிறார்கள்? ஒட்டுமொத்த அரசாங்க அமைப்பே, மக்களாகிய நமக்கு எதிராகத் தானே இயங்குகிறது?
அப்படி என்றால், அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் என்ன?
இந்தக் கேள்வி, ஆட்சிக்கு உட்படுத்தப்படும் மக்களுக்காக மட்டும் கேட்கப்படவில்லை. ஆட்சியையும் அதிகாரத்தையும், பதவியையும், பொறுப்புகளையும் தன்னுள்ளே சுமந்து கொண்டு அரசின் பிரதிபலிப்பாக தன்னை நினைப்பவர்களுக்காகவும் அவர்களது நன்மைகளையும் கருத்தில் கொண்டும் கேட்கப்படுகிறது.
கேள்விகள் தான் நம்மைச் சிந்திக்கத் தூண்டும். கேள்விகள் தான் நம்மை மாற்றத்தை நோக்கி நகர்த்தும். தொடர்ந்து இது போன்ற கேள்விகளை எழுப்புவதற்கும், மாற்றத்தை நோக்கிப் பயணிப்பதற்கான உரையாடல்களில் பங்கெடுப்பதற்கும் வட்டத்தில் இணைந்திருங்கள்.
இந்தப் படைப்பில் உண்மை இருக்கிறது, இந்த உண்மை அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என நீங்கள் நினைத்தால், உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.
முற்றிலும் உண்மை.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ள து. நாம் தேர்ந்தெடுக்கும் அரசாங்கம் நமக்கு இல்லை. அரசு ஊழியர் நமக்கு இல்லை
நாம் எந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தாலும், அரசாங்கம் எப்போதும் நமக்காகச் செயல்படாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நீங்களும் நானும் அரசுப் பணியில் அமர்ந்தாலும், நம்மால் உண்மையாக மக்களுக்காகச் செயல்பட முடியாது என்பதை நாம் உணர வேண்டும்.