இன்றைய விவசாய முறை, நமது உணவுகளை நஞ்சாக்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய மருத்துவ முறையோ, நம்முடைய நோய்களை குணப்படுத்துவதாக சொல்லி, நம்முடைய தொந்தரவுகளை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது. பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் நமக்குள் பொதுப் பார்வையை திணித்து நமது அறிவை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறது. ஊடகங்கள் நமது பார்வைகளை திசைதிருப்பி, நமது சிந்தனைகளை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது.
விளம்பரங்களும் வங்கிகளும் இனைந்து நம்மை கடனாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. பணம் நம்மை சிந்திக்க விடாமல் ஓட வைத்துக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் இப்படியே செயல்படுவதற்கு அரசாங்கம் துணை புரிந்து கொண்டிருக்கிறது. அரசியல், இந்த உண்மைகள் அனைத்தையும் நம்மிடம் மறைத்து, திட்டமிட்டு நமக்குள் அறியாமையையும் பிரிவினையையும் விதைத்துக் கொண்டிருக்கிறது.
இப்படியாக, நமது வாழ்க்கைக்கு அடிப்படையான அமைப்புகள் அனைத்தும் நமக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது, இங்கு மாற்றம் என்பது சாத்தியமா? நமக்கு எதிராக செயல்படும் அமைப்புகள் அனைத்தையும், நம்மில் பெரும்பாலானோர் நமக்காக தான் செயல்படுகிறது என்று நம்பிக்கொண்டிருக்கும் போது, இப்படியான அமைப்புகளையும் அதில் வளர்ந்த மக்களையும் உண்மையாகவே மாற்ற முடியுமா?
இப்படியான சந்தேகங்கள் நமக்குள் அவ்வப்போது எழுவதும், இது போன்ற கேள்விகளை நம்முடைய தினசரி உரையாடல்களில் கேட்பதும் இயல்பானது தான்; நியாயமானது தான். ஆனால், நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக நடந்துவிட வேண்டும் என்று நினைப்பதும், ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரே நாளில் மாற்ற வேண்டும் என்று கனவு காண்பதும் தான் நடைமுறையில் சாத்தியமற்றது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், உண்மையான மாற்றம் என்பது எப்போதும் ஒரு நாளில் நிகழாது. அப்படி ஒரு நாளில் நிகழும் மாற்றம் எப்போதும் உண்மையான மாற்றமாக இருக்காது.
நம்முடைய வாழ்வை வேறு யாரோ ஒருவர் வந்து மாற்றிவிடுவார் என நினைப்பதும், நம்மைத் தவிர வேறு ஒருவரை நம்புவதும், அவர் வந்தால் அனைத்தும் மாறிவிடும் என்று நினைப்பதும் அவரையே கண்மூடித்தனமாக பின்தொடர்வதும் உண்மையான மாற்றத்திற்கு ஒருபோதும் உதவாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், நமது வாழ்வை மாற்றக்கூடிய பொறுப்பும் வலிமையையும் நம்மிடம் மட்டும் தான் இருக்கிறது.
இப்படியான சூழலில் உண்மையான மாற்றம் என்பது சாத்தியமா, இவை அனைத்தையும் நம்மால் மாற்ற முடியுமா, நம்மால் என்ன செய்ய முடியும் என்று நம்மை நாமே அமைதிப்படுத்துவதற்கு பதிலாக, நமக்கான மாற்றத்தை நாம் தான் ஏற்படுத்த வேண்டும், மாற்றத்தை ஏற்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்தால், மாற்றம் உடனடியாக தொடங்கிவிடும்.

இத்தனை ஆண்டுகளாக, நம் அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் அமைப்புகளை ஒரு கட்டுரையிலோ, சில வாசிப்புகளிலோ புரிந்துகொள்ள முடியாது என்பதை உணர்ந்து, தொடர்ச்சியான வாசிப்பும், உண்மையான தேடலும், ஆக்கப்பூர்வமான உரையாடல்களும், அதனை தொடர்ந்த செயல்பாடுகளும் தான் நம்மை மாற்றத்தை நோக்கி நகர்த்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நமது சமூக கட்டமைப்புகள் அனைத்தும் உண்மையில் நமது நலன்களுக்காக தான் செயல்படுகிறதா என்று இப்போது தான், நாம் கேள்வி கேட்க தொடங்கி இருக்கிறோம். தொடர்ச்சியாக இதுபோன்ற கேள்விகளை எழுப்பி, திறந்த மனதுடன் சிந்தித்து, நமது சமூக அமைப்புகளின் உண்மையான நோக்கங்களையும், மறைமுகமான செயல்பாடுகளையும் நாம் புரிந்துகொள்ள தொடங்கிவிட்டால், நமக்கான மாற்றமாக நாமே மாற தொடங்கிவிடுவோம்.
அமைப்புகள் ஒவ்வொன்றும் நமக்கு எதிரான வேலைகளை நாமே செய்வதற்கு எப்படி நம்மை தவறாக வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். நமக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய முடிவுகளை, எப்படி வளர்ச்சி திட்டங்களாக விளம்பரப் படுத்தப்படுகிறது, நமக்கு பயன்படக்கூடிய நன்மைகளாக சித்தரிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கூடவே, நாம் உண்மைகளை தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக எப்படி நம்மை தேவையற்ற செய்திகளால் நமது பார்வைகளை திசைதிருப்புகிறது என்பதை கவனத்தில் கொண்டு செயப்பட வேண்டும். நமது உணர்ச்சிகளை தூண்டி, எப்படி நமது சிந்தனைகளை கட்டுப்படுத்துகிறது, நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை பற்றிய நமது பார்வைகளை கட்டுப்படுத்தி, எப்படி நமது செயல்பாடுகளை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அதனை புரிந்து கொண்டு, நாம் ஒவ்வொருவரும், நமது வாழ்க்கையில், மாற்றங்களை ஏற்படுத்த தொடங்கினால், அது போன்ற மாற்றங்களை தொடர்ச்சியாக ஏற்படுத்தி கொண்டிருந்தால், நம்மால், நமது குடும்பமும் நட்பு வட்டமும் மாற தொடங்கினால், அதுவே, உண்மையான மாற்றத்தின் தொடக்கமாக அமையும்.
அப்படியாக, ஒவ்வொரு அமைப்புகளின் பிடியில் இருந்து நம்மை விடுவித்து கொள்வதின் மூலமாகவும், இருக்கக்கூடிய அமைப்புகளுக்கு மாற்றாக, நமக்கான அமைப்புகளை நாமே உருவாக்குவதின் மூலமாகவும், அந்த மாற்று அமைப்புகளை மக்களுக்கான அமைப்புகளாக மேம்படுத்துவதின் மூலமாகவும் நமக்கு தேவையான மாற்றத்தை நோக்கி நம்மால் நகர முடியும்.
கூடவே, நாம் எவ்வாறு நமக்குள் முரண்பட்டு தொடர்ச்சியாக உடைந்து கொண்டிருக்கிறோம், நாம் ஏன் எப்போதும் நமக்குள் சண்டையிட்டு கொண்டிருக்கிறோம், எதனால் தொடர்ச்சியாக தனித்தனி பிரிவுகளாக உடைந்து கொண்டிருக்கிறோம், நாம் அனைவரும் ஒன்றாக சேராமல் இருக்க நம்மை சுற்றி என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம் ஏன் ஒன்று சேர வேண்டும் என்பதை ஆழமாக புரிந்து கொண்டு, நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்தால், ஒற்றுமையாக செயல்பட்டால், நமது சிந்தனைக்கு அப்பாற்பட்ட அசாத்தியமான மாற்றங்கள் அனைத்தும் எளிமையாக சாத்தியமாகும்.
உண்மையை உரக்க பேசுவதற்காகவும் மக்களை ஒன்றிணைப்பதற்காகவும் வட்டம் செயல்படுகிறது. உண்மையான மாற்றத்தை நோக்கி பயணிக்க, வட்டத்தில் இணைந்திருங்கள்.







